ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்

பதிகங்கள்

Photo

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

English Meaning:
Jnana Path Most Exalted

Than Jnana,
There is no better ethical path, here below;
No better religious faith;
Nothing else than Jnana can confer liberation true;
They that are exalted in Jnana
Are truly exalted among men.
Tamil Meaning:
ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.
Special Remark:
மேற் சரியை முதலியவற்றின் சிறப்புக்களை இதுபோல மிக உயர்த்துக் கூறாமையால், `அவையெல்லாம் ஞானம் வாயிலாக வீட்டிற்குச் சாதன மாதலல்லது நேரேசாதனமாவன அல்ல` என்பதும், `ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச்சாதனம்` என்பதும் பெறப்பட்டது.
``ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல, `அல்லவாம்` என்னும்
ஊனத்தார் என்கடவர்! அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால் அதுபோவ தலர்கதிர்முன் இருள்போல்
அஞ்ஞானம் விடப் பந்தம் அறும்; முத்தி ஆகும்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே வலியுறுத்தி ஓதினமை காண்க.
ஞானம் - மெய்யுணர்வு. அஃதாவது, `பொருளல்லவற்றைப் பொருள் என்று உணராது` 2மெய்ப்பொருளை உணர்தல். இது `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பை அளவைகளாலும், பொருந்துமாற்றானும் நன்கு சிந்தித்துத் தெளிதலே உளதாவதாம். இதனையே, வடமொழியில் `தத்துவ ஞானம்` என்பர். இம்மெய்யுணர் வாவது சிவஞானமே என்பதையும் சித்தியார் மேற்குறித்த செய்யுளின் இறுதியில்,
``ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்;
இறைவனடி ஞானமே ஞானம் என்பர்``
எனக் கூறி முடித்தது. உண்டி சுருக்கல், கொல்லாமை, புலால் உண் ணாமை, ஐம்பொறி யடக்கல், உயிர்கள்மாட்டு இரக்கம் முதலிய பொது அறங்களும், நித்திய நைமித்திக கன்மங்களாகிய சிறப்பறங்களும் ஞானத்தை உணரும் பக்குவத்தை உண்டாக்குவன வன்றி, அவை தாமே ஞானமாய் நின்று வீட்டினைப் பயவா. ஆதலின், அவற்றையே `ஞானம்` என்றாயினும், `ஞானத்தினும் மேம்பட்டன` என்றாயினும் கூறுவார் உளராயின், அவர் கூற்று அறியாமையின்பாற் பட்டதாகும் என்ப தனையே முதலிரண்டு அடிகளில் குறித்தார். அங்ஙனம் கூறுவோர் சமணரும் பௌத்தரும் ஆகிய அவைதிகரும், வைதிகருள் மீமாஞ்சகரும் ஆவர். ஆகவே, அவரது மதங்களை உளத்திற் கொண்டே இதனைக் கூறினார் என்க. அவருள் மீமாஞ் சகரையே மாணிக்கவாசகரும்,
``விரத மேபர மாக வேதியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்`` 1
என்று அருளிச் செய்தார். இடை இரண்டு அடிகளில் வந்த மிகுதி,
``மிகுதியான் மிக்கவை செய்தாரை`` 2
என்பதிற்போலப் புறம்பாதலை உணர்த்திற்று.
இதனால், ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.