ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்

பதிகங்கள்

Photo

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

English Meaning:
Jnani`s Attainments are Unique

For Jnani All four paths are;
Not so for the Yogi until he becomes Mauni;
For him is Kundalini Yoga in ardour performed,
Chariya and Kriya too are his.
Tamil Meaning:
ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.
Special Remark:
`ஆறு ஆதாரங்களிற் பெறுவன யோகத்தில் சரியையும், யோகத்தில் கிரியையும்` எனவே, `ஏழாந் தானமாகிய சகத்திராரத்தில் நிற்போர்க்கு விளைவது யோகத்தில் `யோகம்` என்பதுபோந்தது. குணம் - இயல்பு. வித்தை - ஞானம். தானி - ஆதாரசத்தி `குலத் தோர்க்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தல் பல ஆதாரங்களிலும் விளங்குவது ஒரு சத்தியேயாதல்பற்றி ஒருமையாற் கூறினார். `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்குமே ஞானத்திற் சரியை முதலிய நான்கு என்க. நிட்டை கூடினவனையே ``மோனி`` என்றார்.
இதனால், யோக முதிர்ச்சி யுடையோன், பின் ஞானத்தில் சென்று அதன் நான்கு படிகளில் ஏறுதல் கூறப்பட்டது.