ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
அருள் இவை விட்டறியாமை மயங்கும்
மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.

English Meaning:
Jnana Dispels Heart`s Darkness

Light and darkness together are in heart;
So does it seek Grace and Ignorance at once;
The knowledge within of Jiva is bereft of Light;
Except those who have Divine Jnana attained,
The rest despair of dispelling Darkness.
Tamil Meaning:
ஆன்ம அறிவு இருளே போன்றும், ஒளியே போன்றும் இருதன்மையதாய் நிற்கும் இயல்புடையது. அதனால் அதனிடத்தே மயக்கத்தைத் தரும் அறியாமையும், தெளிவைத்தரும் அறிவும் என்னும் இரண்டுமே என்றும் நிலை பெற்றிருக்கும், எனினும், அறிவால் இருதன்மையை நீக்கி ஒரு தன்மையாகிய அறிவேயாய் நிற்பவரே, அழிவற்ற அறியாமையை அழியப் பண்ணினவராகவும் சொல்லப்படுவர்.
Special Remark:
`ஆதலால், மேற்கூறிய முறையால், அறிவாய் நிற்கும் நிலையைப் பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம் ``போல்`` என்றது `அவையே போலத் திரிந்து` என்றவாறு. ஆன்ம அறிவை `இதயம்` என்றல் பொருந்துமாறு,
``சிந்தையைச் சீவன் என்றும்
சீவனைச் சிந்தை என்றும் ... ... ... வந்திடும்`` 1
என்னும் சிவஞான சித்தியால் அறிக. `அறிவும் மன்னும்` என முன்னே கூட்டி முடிக்க. ``அறியாமை`` என்றது அதனைச் செய்யும் ஆணவ மலத்தையும், ``அறிவு`` என்றது இறைவனது திருவருளையும் ஆதல் அறிக. `இரண்டும் அழிவுற்ற பொருளாயினும், மலம் திருவருளை வெல்லமாட்டாமையால் அதனைக் கொண்டு அறியாமையைப் போக்க வேண்டும்` என்பார், ``அருளால் இவை விட்டு`` என்றார். உருபு தொகுத்தலாயிற்று. `இது பக்குவம் எய்திய வழிக்கூடும்` என்பது கருத்து.
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்; ஒன்றுமேலிடின், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது; உள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்துள தேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள் கூடும்படி கொடி கட்டினனே`` 2
என்பதிலும் இவ்வாறு கூறப்படுதல் காண்க.
இதனால், மேற்கூறியவாற்றால் பதிஞானத்தைப் பெற்றோரது சிறப்புக் கூறப்பட்டது. அறியாமை மயங்கும் மருள் - உண்மையை உணராமல் திரிய உணர்வதற்கு ஏதுவாகிய மலம்.