ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.

English Meaning:
Constant Worship in Mansion of Mind

Even when other men`s wives approach them,
They touch them not,
They have mastered passions all,
Their mind is preoccupied perpetually
With offer of oblation diverse,
They worship prostrating low,
Constantly chanting Mantra
Thus in the Mansion of Mind they abide.
Tamil Meaning:
பிறருக்கு உரியராய மனைவியரை விரும்புதலை விட்டவர்களும், புலனடக்கம் உள்ளவர்களும் ஆகிய அவர்களது நிவேதனம், தோத்திரம், வணக்கம், செபம், ஓமம் என்னும் இவையே வழிபாட்டிற்கு உரியனவாம். அவ்விடத்தில் காற்றும் தூய்மை யுள்ளதாய் இருக்கும்.
Special Remark:
மேற்கூறியவையன்றி மேலும் உள்ள பொருள்களைக் கூறுவார், `அவற்றை ஈட்டிக் கொண்டு வழிபடுவோர் முதற்கண் நல்லொழுக்கத்தில் நிற்பவராய் இருத்தல் வேண்டும்` என்பதனை அஃது இயல்பென்பது தோன்ற, அனுவாத முகத்தாற் கூறினார். கூறவே, `வழிபாடு சிறந்த ஓர் ஒழுக்கமாதலின் அது செய்வார் பிற ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தல் வேண்டும் என்னும் கட்டளை யில்லை` என்று எண்ணுதல் மடமையாகும் என்பது இனிது விளங்கிற்று. புலனடக்கம், நாச் சுவை, வேட்கை முதலியவற்றை அடக்குதல் யோக நெறியிலும் இயம நியமங்கள் அடிநிலையாகக் கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது.
`தாரம்` என்பது தமிழில் அஃறிணை இயற்பெயர் போலவே வருதலை அறிக. `நீத்தாருடையனவும், அவித்தாருடையனவும்` என உரைக்க. அண்ணிய - இனிய. அனுசந்தானம் - இடைவிடாது தொடர்ந்து செய்தல். பஞ்சாங்கம் - ஐந்துறுப்புக்கள் நிலத்திற் பொருந்த வணங்கும் வணக்கம். ஐந்துறுப்புக்களாவன; தோள் இரண்டு, முழந்தாள் இரண்டு, முகம் ஒன்று, இவற்றோடு காது இரண்டு, மார்பு ஒன்று இவையும் நிலத்திற் பொருந்த வணங்குதல் அட்டாங்க வணக்கமாம். இதனை `சாஷ்டாங்கம்` என்பார்கள். இனம் பற்றி இதனையும் இங்குக் கொள்க. மகளிர்க்குப் பஞ்சாங்க வணக்கம் ஒன்றே உரியது. மண்ணும் அனல் - சிவாக்கினியாகச் செய்யப்பட்ட நெருப்பு. பவனம் - காற்று.
இதனுள்ளும் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல
இதனால், மேற்கூறப்பட்டவற்றிற்குப்பின் எஞ்சி நின்ற பொருள்கள் கூறப்பட்டன்.