ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

English Meaning:
If breath that is exhaled
Is contained within
The thoughts too are contained there
And the Lord shall leave you not.
Tamil Meaning:
பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதே யாம். அதனால், இறைவன் அவ் யோகியினது உள்ளத்தினின்றும் புறம் போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)
Special Remark:
``புக`` என்பது, ``நின்றால்`` என்பதனோடு முடிந்தது. ``திறப்பட`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாகலின், ``திறப்பட்டு`` எனத் திரிந்து நின்றது. இதற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `நின்றது` என்பது, துணிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி.
இதனால், பிரத்தியாகாரத்தினது இன்றியமையாமை கூறப்பட்டது. இது கூறுவார், இதற்குப் பிராணாயாமம் இன்றியமை யாமையும் உடன் கூறினார்.