ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

English Meaning:
Close the Muladhara orifice below
Centre your thought on Sahasrara orifice above
And on that miditate;
Fix your lance-like vision on that Space Vast;
Thus practising Yoga,
You shall vanquish Time.
Tamil Meaning:
(மாணவனே! பிரத்தியாகாரத்தில் நீ விசுத்திக்கு மேலும் செல்ல விரும்புவையாயின், கும்பகத்தால் நின்ற வாயு கீழே போகாமல்) எருவாய்ப் புழையை இறுக அடைத்து, (அவ் வாயு மேல் அண்ணத்தில் உள்ள துளை வழியாக மூக்குத் துளையை அடைந்து புறப்படுமாறு) மனத்தை அவ் அண்ணத்தின் துளையிடத்தே வைத்துப் புருவ நடுவில் நில் - அந்நிலையில் (அக்காற்று, கண் காதுகள் வழியாகவும் பரவிப் புறப்படும் ஆதலின்), கண்களை இமையும் கொட்டாமல் விழித்திரு. இதுவே நீ காலத்தை வெல்லும் முறை.
Special Remark:
தந்துரைத்தன எல்லாம் இசையெச்சங்கள், புருவ நடு வாகிய இடம், `ஆஞ்ஞை` (ஆக்ஞை) என்னும் பெயருடையது. `அறிவிற்கு நிலைக்களம் என்பது இதன்பொருள். இஃது `இலாடம்` என்றும் சொல்லப்படும். இயல்பாக மூக்கின் வழியே உட்புகுந்து மீண்டும் மூக்கின்வழியே வெளிச் செல்லுகின்ற காற்றை அவ்வாறு செல்லாமல் தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தின் மேல் உள்ள முது கெலும்பின் அடிப்பாகத்திலிருந்து அம் முதுகெலும்பின் உள்ளால் செல்லும்படி செலுத்தினால், அது சிறிது சிறிதாக அவ்வழியே அண்ணத்தில் உள்ள துளையை அடையும். அதனை வாய்வழி வாராது தடுத்தால், உச்சியை அடைந்து மூக்கு வழியாக வெளிவரும். இந்த மாற்று வழியால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டாதலுடன், தொழிற்படாமலே மடிந்து கிடக்கின்ற அறிவுக் கருவிகள் பலவும் எழுச்சியுற்றுத் தொழிற்படும். அதனால், உண்மைகள் பல எளிதிற் புலனாகும். இம்முறையைத் தான், `இருவழியை (இடைகலை பிங்கலைகளை) அடைத்து, ஒரு வழியை (சுழுமுனையை)த் திறத்தல் வேண்டும்` என்று யோக நூல்கள் கூறுகின்றன. ஞானசம்பந்தரும்,
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்(து)
ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு), இட
ரான கெடுப்பன அஞ்செ ழுத்துமே. -தி.3 ப.22 பா.3
என்றும்
``ஐம்புலன், நாலாம் அந்தக் காரணம்,
முக்குணம், இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை`` -தி.1 ப.128
என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு மூச்சை அடக்கும்பொழுது இருதயத் துடிப்பும் நிற்கலாம். ஆயினும் அஃது இருதயம் கெட் டொழிந்ததாகாது. சிறிதுபொழுது அதன் செயலை நிறுத்திவைத்து, மீட்டும் தொடங்குவதேயாகும். இது, கடிகாரத்தில் ஊசலியை - பெண்டுலத்தைச் சிறிதுபொழுது நிறுத்திவைத்து, மீட்டும் அசைய விடுவது போன்றது. இவ்வாறாகவே, இது வாழ்நாள் நீட்டிப்பதற்கு ஏதுவாதல் விளங்கும். எவ்வாறாயினும், இவையெல்லாம் முறையறிந்து செய்யாத வழிப் பெருந்தீங்கு விளைப்பனவாகவே முடியும்.
`மூச்சைப்பிடிப்பது` என்றால், முருட்டுத்தனமாக, விடாமலே பிடித்துக் கொண்டிருப்பது என்பது பொருளன்று; முறையறிந்து சிறிது சிறிதாகப் பயின்று, இயன்ற ஒரு கால எல்லை அளவேதான் பிடிக்கத்தக்கது. `சிரசாசனத்தில் இருப்பது` என்றால், ``எப்பொழுதும் அப்படியே இருப்பது`` என்பது பொருளாகாதது போலத்தான், பிராணாயாமம், பிரத்தியாகாரம் முதலிய யாவும். சிறிது நேரம் செய்த சிரசாசனம், பின் பல நேரத்திற்குப் பயன் தருதல் போலத்தான் பிராணாயாமம் முதலியவைகளும் பயன்தரும்.
மூக்கு வழியாக உட்புகுந்த காற்று மீளவும் அவ்வழியே திரும்பிப் போகாதவாறு தடுத்து, அதனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி உச்சியினின்றும் மூக்கு வழியாக மீளச் செய்கின்ற யோகிகள், தங்கள் உடலை விட்டுப் போய்விடக் கருதுவார்களாயின், உச்சியை அடைந்த காற்று மூக்கு வழியாகப் புறப்பட ஒட்டாமல் மூக்கைப் பிடிப்பர்; அதனால், அக்காற்று உச்சியில் மென்மையாக மூடப் பட்டிருக்கும் பெருந்துளையை (பிரமரந்திரத்தை)த் திறந்துகொண்டு வெளியேறிவிடும். அதனுடன் `உடல்` என்னும் இயந்திரம் செயலற்று வீழ்ந்துவிடும். இது பற்றற்ற நிலைமையில் வீடுபெறும் விருப்பத்தால் இறை நினைவுடன் செயப்படுதலின், பாவமாதல் இல்லை. யோகியர் பலர் இவ்வாற்றால் உடல் விடுத்துச் சென்றதை நூல்களால் அறிகின்றோம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பெருமிழலைக் குறும்ப நாயனாரது செயலாகும். அதனைச் சேக்கிழார் பின் வருமாறு எடுத்தோதுவார்.
மண்ணில் திகழுந் திருநாவ லூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்(று)
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்
என்பார்.
நாலு கரணங் களும்ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவே முன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாத மடைவார் கயிலை முன்னணைந்தார்.
(மறை மூலம் - மூல மறை; மூல மந்திரம்; திருவைந்தெழுத்து. `கபால நடுவை மூல மந்திரம் திறக்க` என்க)
காலத்தை வெல்லுதல் - காலத்தால் தடைப்படாது, முக்காலப் பொருளையும் ஒருங்குணர்தல். இப்பேரறிவு பிறக்கவே, கருவி கரணங்களின் வழிச்செல்லும் ஏகதேச அறிவில் விருப்பம் நிகழாது என்க. `மேலைத் துவாரத்தில்` என்னாது, ``மேலைத் துவாரத்தின் மேல்`` என்றதனால், `நிற்றல் புருவ நடுவில்` என்பது பெறப்பட்டது.