ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

English Meaning:
Separate the Maya from the Lord and
Separating the ego from the Maya, dissolve it away
Then arise awareness, contemplation and loss of ego
Which constitute the glory of Pratyahara.
Tamil Meaning:
மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.
Special Remark:
இதனானே, `பிரத்தியாகாரமாவது இது, என்பது விளங்கும். ``ஒருக்கு`` பிறவினையாய முதனிலைத் தொழிற்பெயர். உபாதி - குற்றச் சார்பு; அது மாயேயத்தொகுதி, சடமாய அவையும் ஒருவாற்றால் ``சோதி`` எனப் படுமாகலின், சித்தாய ஆன்ம அறிவை, ``ஒண்சோதி`` என்றார். உணர்வு, தொழிற்பெயர். பிரிவும், உணர்வும் ஆகுபெயர்கள். கரைத்தல் - அழித்தல். கரைதல் - இளகுதல். ``உள`` என்பதன்பின், ``ஆதல்`` என்பது வருவிக்க. `பயன்` என்னாது, `பெருமை` என்றார். `சித்தி, காயகற்பம் முதலியன சிறந்த பயன்கள் அல்ல` என்றற்கு.
இதனால், பிரத்தியாகாரத்தின் சிறப்புப் பயன் கூறப்பட்டது.