ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே. 

English Meaning:
If thus meditating,
Luminescence you glimpse at the Visuddhi centre at the throat
Know you are destined for bliss unalloyed; If at the Throat`s Center,
Lunar light you behold,
Then will your body,
In divine joy intoxicated be.
Tamil Meaning:
`சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப் பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.
Special Remark:
இங்ஙனங் கூறவே, `ஞான நாட்டம் உடையோரே முற்கூறிய நிலையின் மேலும் முயன்று இவ்வொளியைக் காண்பர்` என்பதும், `அந்த நாட்டம் இல்லாதோர் முற்கூறிய நிலையோடே நின் றொழிவர்` என்பதும் பெறப்பட்டன. கண்டம் `விசுத்தி` எனப்படும். `மிக்க தூய்மை` என்பது இதன் பொருள். ஞான நெறியிற், செல்லும் முதல் இடமாதல் பற்றி இப்பெயர் பெற்றது. `நிலவொளி` வினைத் தொகை. ``ஆம் அதுவே`` என்பதில் `அது` என்பது எஞ்சிநின்றது.
இதனால், `விசுத்தி` என்னும் ஐந்தாவது ஆதார நிலை கூறப்பட்டது.