ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

English Meaning:
They know not the divine art
Of fixing breath twelve matra long,
Below the navel region;
Once they learn that art
The Lord enters within, shouting in joy.
Tamil Meaning:
உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.
Special Remark:
இதில் குறிக்கப்பட்ட இடம் `மூலம்` (அடிநிலை) எனப்படும். இது முதல் ஆதாரம், இஃது எருவாயுமன்று; கருவாயு மன்று; இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என்பது பின்னர் இனிது விளங்கும். தாபித்தல் நிலைபெற வைத்தல். அவ்வாறு வைப் பதனையே ``மந்திரம்`` என்றாராகலின், ``தாபிக்கும்`` என்ற பெய ரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``மந்திரம்`` என்றது, `இரகசியம்` என்னும் அளவாய் நின்றது. இனி, `மந்திரம்` என்றே பொருள் உரைப்பின், ``அறிகிலர்`` எனப் பிறரை இகழ்கின்ற நாயனார், தம் மாணாக்கர்க்கு அதனை அறிவியாது வாளாபோதல் அடாதாம். அன்றியும், இஃதொன்றற்கே யன்றி ஏனைப் பலவற்றிற்கும் மந்திரம் உண்மையின் அவ்விடங்களிலும் அவற்றைக் கூறல் வேண்டும்; அவ்வாறு கூறிற்றிலர். இனி, மந்திரமே யன்றி அதிதேவர், அக்கரம், அடையாளம் முதலாக மற்றும் பல உள ஆகலின், அவற்றையும் குறியாது போதல் குன்றக் கூறலாம். அங்ஙனமாயின், அவையும் எடுத்தோதற் பாலனவாகலின் அவற்றை அவ்வாறு ஓதாதுபோதல் என்னை எனின், அவையெல்லாம் யோகத்துட் கிரியையேயாய், நூல்கள் தோறும், மரபு தோறும் வேறு வேறாகக் கொள்ளப்படும் வழி பாட்டு முறைகளேயாதலால், சிவநெறியாளர் அனைவர்க்கும் பொதுப் பட அருளிச் செய்யும் இந்நூலூல் அவற்றுட் பொதுவாவன சிலவற்றை யன்றி ஏனையவற்றை வரையறுத்தோதுதல் ஆகாமையின், ``அவற்றை அவரவர் தம் தம் வாய்ப்பிற்கு ஏற்பப் பெற்றுக் கடைப்பிடிக்க`` என்னும் கருத்தால் வாளா போகின்றார்; ஆதலின், அது நாயனார்க்குக் குற்றமாதல் எங்ஙனம் என்க. சைவாகமங் களுள்ளும் இவற்றுட் சிலவற்றை வேறு வேறாகக் கூறப்படுதற்கும் காரணம், `இவை யெல்லாம் சில வழிபாட்டு முறையே`` என்னும் கருத்தினாலேயாம்.
யோகமும், மன ஒருமைக்கும், ஆன்ம பரிபக்குவத்திற்கும் உரிய ஒரு சாதனமேயன்றிப் பொருளியல்பை உள்ளவாறுணரும் தத்துவ ஞானம் (மெய்யுணர்வு) அன்று` என்பது உணரமாட்டாதார், யோகத்தையே, ``ஞானம்`` என மயங்கி, ஒரு நெறியையே பற்றிப் பிற வற்றை இகழ்வர், இங்கு யோகத்தை உணர்த்தும் நாயனார், பின்னர் ஞானத்தையே முடிவாக உணர்த்துதல் காண்க.
இவ்வாறாயினும், இவ்வழிபாட்டு முறைகளுள் சிலவற்றை இவ்வதிகாரத்திறுதியில் சிறிது காண்போம். பிற அறங்களினும், பிற தெய்வ வழிபாட்டினும், சிவதன்மமும் சிவ வழிபாடும் வேறாதல் போலப் பிற யோகங்களினும் சிவயோகம் வேறு, சரியை முதலிய நான்கனுள் மூன்றாவதாகிய யோகம் சிவயோகமே என்பது உணர்க. முதல் மூன்று அடிகளிலும் வடவெழுத்துப் பகரம் தமிழில் வகரமாய்த் திரிந்தது.
இதனால், பிரத்தியாகாரத்தில், `மூலாதாரம்` என்னும் முதல் ஆதார நிலை கூறப்பட்டது.