ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

English Meaning:
If below the nose-tip
You look twelve-finger length,
And then concentrate and meditate
The mighty Siddha yoga shall yours be
And imperishable shall your body be.
Tamil Meaning:
மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடை கீழாக உள்ள இடத்தில் நீ மனத்தை நிறுத்தித் தியானிக்க வல்லையாயின், அட்டமா சித்திகளைத் தரும் சித்தியோகம் தானே வந்து உன்னை அடையும், உடம்பிற்கும் அழிவு இல்லையாகும்.
Special Remark:
மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடைக்கீழ் உள்ளது இருதயத் தானம், இஃது `அனாகதம்` எனப்படும்; `வரவற்றது` என்பது இப் பெயரின் பொருள். மனத்தின் இடம் இதுவே` என்பது கருத்து. `இவ் வளவிலே சிவயோகமல்லாத பிற யோகங்கள் கைவரும்` என்பதையே பின்னிரண்டடிகள் உணர்த்தின. அட்டமாசித்திகளைப் பயனாக உடைய யோகம் `ஹட யோகம்` எனவும், உடம்பு நரை திரை மூப்பு இன்றி நெடுங்காலம் நிற்றலைப் பயனாக உடைய யோகம் `ராஜயோகம்` எனவும் சொல்லப்படும். இவையெல்லாம் ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, அதற்குத் தடையாவனவுமாம்; ஆதலின், ஞானத்தை விரும்புவோர் இவற்றை விரும்புதல் இல்லை. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `அனாகதம்` என்னும் நான்காவது ஆதார நிலை கூறப்பட்டது.