ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்

பதிகங்கள்

Photo

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

English Meaning:
Step by step, practise mind`s withdrawal
And look inward;
One by one many the good you see within;
And may you then meet the Lord,
Now and here below
Whom the ancient Veda still searches Everywhere.
Tamil Meaning:
மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதி யோடு இருத்தலும் கூடும்.
Special Remark:
`கருத்தினை உள்ளே கண்டு கண்டு உறவாங்கிடின்` என மாறிக் கூட்டுக. காணுதல், கொள்ளுதல். இவற்றிற்குச் செயப்படு பொருள்கள் வருவிக்கப்பட்டன. ஆதார நிலைகள் இனிக் கூறப்படும். ``குணம்`` என்பது, ``கோளில் பொறியிற் குணமிலவே`` (குறள், 9) என்பதிற் போல, `பயன்` எனப் பொருள் தந்தது, தேடி - தேடப்பட்டவன்.
இதனால், பிரத்தியாகாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.