ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

பதிகங்கள்

Photo

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

English Meaning:
I held my Lord in me concealed,
I adored Him in my heart`s depths,
Lo! He revealed Himself unto me
And blessed me—here below,
Well may you adore Him
Revealing the rapture abounding and love endearing
That too pleases Him far.
Tamil Meaning:
மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.
Special Remark:
மெய்யுணர்வினால் உணர்பவர் உள்ளத்தில் இறைவன் இனிது வெளிப்பட்டுநிற்கவும், பிறர் அவனை `யாண்டுளன்` எனத் தேடி எய்க்கின்றாராதலின், மெய்யுணர் வுடையார், இறைவனைத் தங்கள் உள்ளத்தில் ஒளித்து வைத்திருப் பதாகவும், வெளியே புறப்பட ஒட்டாது தளையிட்டு வைத்ததாகவும் கூறுதலைப் பின்வரும் திரு மொழிகளாலும் உணரலாம்.
ஆர்வல்லார் காண அரனவனை! அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தலைநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. -தி.11 அம்மைத் திருவந்தாதி, 96
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
றன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. -தி.5 ப.91 பா.2
`அவ் வீசனை` எனச் சுட்டு வருவித்து உரைக்க, வேட்சி - வேட்கை. உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், மறைத்தலைச் செய்பவனாகிய இறைவனை அருளலைச் செய்பவனாகப் பெறும் முறை கூறப்பட்டது.
(இம் மந்திரத்தின்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `நின்றது தானாய்` என்னும் மந்திரம், மேல் 400 ஆவது திருமந்திரமாக வந்தது.)