ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 25. கல்லாமை

பதிகங்கள்

Photo

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

English Meaning:
Though learned, fools are they if with Sivajnana they`re not acquainted,
If kith and kin they give not up nor strike at root of ignorance
As their eyes turn not to quarters
They alone truly reckon who, wise in love, win the Truth.
Tamil Meaning:
சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
Special Remark:
`ஞானம், அன்பு` என்பன அவற்றின்வழி நிகழும் ஒழுக்கத்தின்மேல் நின்றன. கல்லாது ஒழுக்கம் இல்லாதார், தம் தீயொழுக்கத்தை, `நல்லது` என மருட்ட வகையறியார்; கற்று ஒழுக்கம் இல்லாதார் அவ்வகையை நன்கறிவராகலின் அவரை, `மூடர்` என்று மட்டும் கூறியொழியாது, ``கலதிகள்`` என்றும் இகழ்ந்தார். `மேலைத் திருமந்திரத்துள் கூறப்பட்ட கல்லாதாரால் உலகிற்கு உளவாகும் தீங்கினும், இக் கற்றாரால் உலகிற்கு உளவாகும் தீங்கு பெரிது` என்பது கருத்து. `விடார்` என்பது நீண்டு நின்றது. `வீடார்` என்றே கொண்டு, உடைமையது தொழில். உடையார்மேல் ஏற்றப்பட்டது எனலுமாம். துரிசு - மனமாசு. திசை, ஆகுபெயர். ``மூடர்கள், மதியிலோர்`` என இருகாற் கூறியது, தாமே உணர்தலும், பிறரைக் கண்டு உணர்தலும் ஆகிய இரண்டும் இலர் என்றற்கு.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குத் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். -குறள் 834
என்றார் திருவள்ளுவரும். `நிற்போரே கணக்கறிந்தார்கள்` என ஏகாரத்தைப் பிரித்துக்கூட்டி உரைக்க.
இதனால், நூலைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லாதவர் கல்லாதவரே; கற்றவராகார் என்பது கூறப்பட்டது.