ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 25. கல்லாமை

பதிகங்கள்

Photo

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

English Meaning:
Of all power bereft, I fell into Karma`s griefs,
Learning not Hara`s ways, into dark abysmal depths I fell;
I learnt not to stamp the Great Benefactor in my heart,
I learnt only to dance down the primrose path to hell.
Tamil Meaning:
நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
Special Remark:
நாயனார் எவ்விடத்தும் தம்மை இழித்துக் கூறாது, தாம் பெற்ற பேற்றின் சிறப்பையே கூறுதலின், இம்மந்திரத்திற்கு அவர் தம்மை இழித்துக் கூறினாராக வைத்து உரைத்தல் பொருந்தாது என்க. இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. தகைமை - தன்மை; தன்மை உடையாரை, `தன்மை` என அஃறிணையாகக் கூறினார்; இழிபு பற்றி. `அறியாத் தன்மையர்முன் கல்லேனாகின்றேன்` என் றதனால், `அறிந்த தன்மையர் முன் கற்றேனாய் விளங்குகின்றேன்` என்பது போந்தது. இதனால், கற்றாரைக் கல்லாதார் `அறிவிலர்` என்று இகழ்தல் பெறப்பட்டது. அதனை,
உருவமும், உணர்வும், செய்தி ஒத்திரா; கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண்டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன்? மதியி லாதாய்,
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
-சிவஞானசித்தி பரபக்கம். உலகாயதன் மதம் - 9.
என்பார் போல்பவரிடத்துக் காண்க.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. -குறள் 976
என்றார் திருவள்ளுவரும். `வினை கில்லேன், தகைமையின் கல்லேன், பொருளே வல்லேன்` என முன்னே கூட்டி முடிக்க. ``தகைமையின்`` என்பதில் சாரியை நிற்க, `முன்` என்னும் பொருட்டாய கண்ணுருபு தொக்கது. ``வழங்கும் பொருளே வல்லேன்`` என்றாராயினும், `பொருள் வழங்கவே வல்லேன்` என்றல் கருத்து என்க. `உட்கலேன்` என்பது விரித்தல் பெற்றது.
இதனால், கல்லாதார் வினை செய்தல், துயர்ப்படல், இவறன்மை, சாக்காடு முதலியவற்றிற்கு அஞ்சுதல் என்னும் குற்றங் களை உடையராதல், எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டன.