ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 

English Meaning:
Seek not wealth that many reckon as life indeed,
Nor waste your days on silly minded fools, of wisdom dark,
But turn your feet to the eternal Home and praise the Lord,
Then true bowman you prove, hitting straight the mark.
Tamil Meaning:
பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர்.
அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.
Special Remark:
காண்டல் - பொதுவகையான் உணர்தல். துணை - அளவு. உம்மை முற்றும்மை. ஒன்று - ஒருநெறி. மெலிந்த சினம் - அறிவு குறைந்தமையால் விளைந்த சினம். `வீழ்ந்தார்` என்பது குறிப்பு உருவகம்.
இதனால் அறத்திற்கு முதலாவது அன்பு என்பதும், அவ்வன்பு தானே இறைவனை அடைதற்கும் வழி` என்பதும் கூறப்பட்டன. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப் பட்டது.
இவ்வதிகாரத்தின் இறுதி நான்கு திருமந்திரங்கள் சில பதிப்பு களில் முறைமாறிக் கிடக்கின்றன.