ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 

English Meaning:
Charity denying they know not the Lord`s Feet to priase,
Not enter they the precincts of the City of Siva`s Grace;
Their ears inclined to those who falsehoods preach,
They stand to sin enslaved, condemned to hell`s hot embrace.
Tamil Meaning:
அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.
Special Remark:
அறம் என்பது, சிவபெருமான் தனது திருவுளத்தின் விருப்பத்தைக் கூறியதேயாகலான், அதனைச் செய்யாதே நிகழ்த்தும் பிற செயல்கள் அவனது வழிபாடாம் எனக் கருதுதல் அறியாமை யாதல்பற்றி, ``அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்`` என்றார். மறம் செய்வார் யாவராயினும் அவரைச் சிவபிரானது மறக்கருணை நரகிற் செலுத்தும் என்பதனை,
``இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்;
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்;
.... .... .... .... .... .... ஐயன் ஐயாறனாரே`` -தி.4 ப.38 பா.10
எனத் திருநாவுக்கரசரும் வலியுறுத்தோதினார். திருமூலரும், திரு நாவுக்கரசரும் முதலிய சிவநெறிப் பேரருளாசிரியர்கள் அறத்தினை இத்துணை வலியுறுத்தி அருளிச்செய்திருக்கவும், `புறநெறியின்கண் உள்ளது போலச் சிவநெறியில் அறம் அத்துணை வலியுறுத்தப் படவில்லை` என்பார் உளராயின், அவரதுநிலை இரங்கத்தக்கதாம் மறம் (பாவம்) மன்னுதல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.
இதனால், `அறநெறி சிவநெறிக்கு இன்றியமையா உறுப்பு` என்பது கூறப்பட்டது.