ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 

English Meaning:
The aeons pass, the unreturning ages fly;
The allotted span of life daily dwindles away;
This irksome body, as if squeezed by some power unknown,
Perishes; seeing this yet, they learn not charity`s way.
Tamil Meaning:
உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.
Special Remark:
`இஃது அறியாமையின் வலி` என்பது குறிப்பெச்சம். ``ஒழிந்தன`` முதலிய அத்தொழில்மேல் நின்ற வினைப்பெயர். முற்றாக வைத்து, `அவற்றை` என்பது வருவித்து, அச்சுட்டு அத் தொழிலைக் குறித்ததாகவும் உரைப்பர்.
ஊழி பல நீங்குதல் உரை யளவையால் அறியப்பட்டது. ஏனைய காட்சியால் அறியப்பட்டன. வேண்டுமிடங்களில் எச்ச உம்மை விரிக்க.
இதனால், அறஞ் செய்யாதவரது அறியாமை மிகுதி கூறப்பட்டது.