ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

English Meaning:
They, whose hearts melt in charity, see the Feet of the Lord,
The steadfast of faith attain Swarga`s might,
But those sinful ones of charity bereft, helpless, forsaken,
Engulfed in passions low, pass into eternal night.
Tamil Meaning:
உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான்.
ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.
Special Remark:
கெடுவதும் ஆவதும் என்னும் எழுவாய்கள் `நடு` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டன.
`நடு` என்னும் இடப்பெயர் முன்னர் அதன்கண் நிற்றலைக் குறித்துப் பின்நின்று செய்தலைக் குறித்தது. ``செய்து`` என்றது, ``நாட`` என்பதனோடு முடிந்தது. ``நாடவும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``அது பசுவாம்`` என மாற்றுக.
பசு, ஆகுபெயர்.
இதனால், அறம் செய்பவரையே இறைவன் விரும்புதல் கூறப்பட்டது.