ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

English Meaning:
Earthly desires to worldly objects attached,
No end know; but in charity`s noble way,
E`en the little things you give, sure props provide;
All the rest meekly take as the Lord`s gift for the day.
Tamil Meaning:
சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.
Special Remark:
``பற்று`` இரண்டனுள் பின்னது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``அற்றம்`` என்புழி, `என்று` என்பதும், `ஒன்றும்` என்புழி, `ஆயின்` என்பதும், எஞ்சி நின்றன. அறநெறி வேட்கையரை ``அறநெறி`` என்றார். `அறநெறிக்கல்லது உரையான்` என முன்னே கூட்டி முடிக்க. ``அண்ணல்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உரையான்`` என்றார். `ஒன்றாயினும், உங்களால் உற்று ஈந்ததுவே துணை` என மாறிக் கூட்டுக. `மற்றும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `கொள்ளுமாறு` என்பதன்பின் எச்ச உம்மையும் `அது` என்னும் பயனிலையும் எஞ்சி நின்றன. இதனால், `அறம் ஒன்றே உயிர் உய்யும் நெறி` என்பது வரையறுத்துக் கூறப்பட்டது.