ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 

English Meaning:
Some in charity overflow; by such noble deeds done,
Noble gods they become in human being`s high esteem;
And the many who hold this fleshly body their dear God,
To them comes Death, saying; ``I am your God supreme.
Tamil Meaning:
மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.
Special Remark:
`தான் செய்வது தவமாம்` என மாறுக. `தவமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தவத்து அவ்வழி - தவத்திற்குரிய அவ்வழி. மான் - பெரியோன். சிவபெருமானை வட மொழி `மகாதேவன்` என்றும், தமிழ்மொழி `பெரியோன்` என்றும் கூறுதலை அறிந்துகொள்க. மதிக்கும் - மதிக்கும் இயல்புடையதாகும். `சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு` (கொன்றை வேந்தன்) என ஔவையாரும் கூறினார். ``மனிதர்கள்`` என்பது விளி. `மனிதர்காள்` என்பதே பாடம் எனலு மாம். ``உயிர்க்கின்ற`` என்பது முற்று. இழிவு தோன்ற அஃறிணை யாகக் கூறினார். இதனால், இருவகை அறங்களுள் துறவறமே உயர்ந்தது என்பது கூறப்பட்டது. `கூற்றங் குதித்தலும் அதனாலே கை கூடுவ தாகும்` (குறள் - 269) என்பதும் குறிப்பால் புலப்படுத்தப்பட்டது. ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு`` (குறள் - 266) என்றார் திருவள்ளுவரும்.