ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 

English Meaning:
Our life`s boat across the foaming sea of Karma flies;
Twin the pathways to dispel the labourious strain;
Glory giving tapas and charity the heavenly escorts,
To us and our dear kin from life`s battle vain.
Tamil Meaning:
அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.
Special Remark:
``திளைக்கும் ... ... ... ... இளைக்கும்`` என்பதனை ``அறம்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தோணியாய்` என ஆக்கம் விரிக்க. `ஒருவன் செய்யும் நல்வினை தீவினைகள் அவன் கிளைஞர்க்கும் ஆகும்` என்பது வேத சிவாகமங்களின் துணிவு.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். -குறள், 115
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். -குறள், 166
என்றாற்போலும் திருக்குறள்களையும் காண்க. இதனால், இருவகை அறத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப் பட்டன.