ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

English Meaning:
Who the self realise, seek and adore the Feet of the I ord;
Who the self realise, most freely give in charity;
Who the self realise, Lord of Tattvas become;
Who the self realise, kin they become to the Lord in dear amity.
Tamil Meaning:
`சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.
Special Remark:
``தாள்பணிவார்`` முதலிய மூன்றனையும் எழு வாயாக்கியும், ``தாமறிவார்`` மூன்றனையும் அவற்றிற்குத் தனித்தனிப் பயனிலையாக்கியும் முடிக்க. இவற்றால் இவை மூன்றும் அறத்தின் வகையாதல் இறுதியடியில் பெறப்பட்டது. தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரித்து, `தாமறிவார்க்கே பரன் தமனாம்` எனக் கூட்டி உரைக்க. `தமர்` எனப் பன்மையாக ஓதுதல் பாடம் அன்று. `அறம் செய்வோரே அறிவுடையோர்` என்பது உணர்த்துவார், ஏனைய வற்றையும் உடன் கூறினார். ``விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு``(குறள், 89) எனத் திருவள்ளுவரும் அறம் செய்யாமையை, `மடமை` எனவும், அதனை உடையாரை, `மடவோர்` எனவும் கூறுதல் காண்க.
இதனால், `அறத்தை விரும்பிச் செய்தல் அறிவுடையோர்க்கே கூடுவது` என்பதும், அறத்தின் வகையும் கூறப்பட்டன.