ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

English Meaning:
To him who renounces, no kith or kin has he;
To him who is dead no delights has he;
To him who charityless is, the Lord denies His Presence;
By the measure of thy charity done, the Lord is known to thee.
Tamil Meaning:
மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.
Special Remark:
வருவித்து உரைத்தன பலவும் இசையெச்சங்கள். ``வந்திலன்`` எனத் துணிவு பற்றி இறந்தகாலமாயிற்று. வழிமுதல் - பிற் காலம். ``அறியும்`` என்றது `அறிந்து நில்லுங்கள்` என்றபடி. அளவு - உண்மை. இதனால், மக்கள் அறிவுடையராயின், இருவகை அறங் களுள் யாதானும் தமக்கு இயன்றதொன்றனைச் செய்தல் வேண்டு மன்றிச் செய்யாதொழிதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. ``அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை - மறத்தலினூஉங் கில்லை கேடு`` (குறள், 32) என்றார் திருவள்ளுவரும்.