ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பதிகங்கள்

Photo

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 

English Meaning:
The food that feeds the needy—that alone true charity is;
True men they who that simple truth do find;
But they who hoard, like water in pool past access,
To eat and gorge–to Charity`s ways are they blind.
Tamil Meaning:
`பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.
Special Remark:
`அறிந்தாராயின், செல்வத்துப்பயன் ஈதலே` (புறம், 189) என்று உணர்ந்து வறியார்க்கு ஈவர் என்பது கருத்து. ``வறியார்க்கொன் றீவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து`` (குறள் - 221) ஆதலின், ``அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன்`` என்றார். ``கூவல் குளத்தினில்`` என்பது, `கூவலிலாதல் குளத்திலாதல்` என்னும் பொருளது. `கடல்நீர் பெரிதாயினும் நீர்வேட்கையுடையார் அதனிடத்துச் செல்லாமை போலப் பெருஞ்செல்வராயினும் ஈயாதார் மாட்டு இரவலர் செல்லார்; அதனால், அப்பெருஞ்செல்வர் அச்செல்வத்தால் சிறிதும் பயன் பெறார் என்பதும், கூவலும், குளமும் சிறியவேயாயினும் நீர்வேட்கை யுடையார் அவற்றிடத்தே சென்று நீருண்டல்போலச் சிறிது செல்வம் உடையாராயினும் ஈபவரிடத்தே இரவலர் சென்று தாம் வேண்டிய பெறுவர்; அதனால் அச்சிறு செல்வரே புகழும், அறமும் ஆகிய செல்வத்துப் பயனைப் பெறுவர் என உணர்ந்து ஈகையுடையராதல் வேண்டும்` என்பது பின்னிரண்டடிகளாலும் உணர்த்தப்பட்டது.
``தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்``
என்னும் புறப்பாட்டினைக் காண்க (புறம், 204).
இதனால், `அறிவுடை மக்களாயின், செல்வத்தின் பயன் அறம் செய்தலேயாம்` என்பது கூறப்பட்டது.