ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை

பதிகங்கள்

Photo

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

English Meaning:
All Your Wealth Cannot Bribe Death Away
When the vital spark leaves this mortal mould,
Bribe there is none to lure it back; think, think of the Lord;
Death`s loyal servants on restless mission bent,
Do nothing consider that with hot breath you pulse.
Tamil Meaning:
உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.
Special Remark:
`அடுக்கும்` என்பது இடைக் குறைந்து நின்றது. ``பரிசு`` மூன்றும் ஆகுபெயராய் அவற்றை உடைய பொருள்களைக் குறித்தன. `அதனையும்` என்பது, `அத்தையும்` என மருவிற்று. அதன்பின், `கொள்ள` என்பது எஞ்சிநின்றது. `அத்தையும் நமன் தூதர் சூழகிலாரே` எனக் கூட்டுக.
இதனால், செல்வமும், சுற்றமும் துணையாகாமையைத் தொகுத்துக் கூறி, `சிவபெருமானை அடைக` என முடித்துக் கூறப்பட்டது.