ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை

பதிகங்கள்

Photo

வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே. 

English Meaning:
Earthly Treasures are Fleeting
However much of treasure we may leave,
Our wife, children, brothers and sisters will only
exclaim ``What has he left for us?``
If we devote our life merely for such treasure,
At the end when we are in agony no one will come for help.
Tamil Meaning:
ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப் படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்கு வார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!
Special Remark:
`மனைவி முதலாயினார் உடன்வரும் துணையாக மாட்டாமை அறிந்து, அவர் பொருட்டாகப் பொருள் ஈட்ட முயலு தலை விடுத்துச் சிவபெருமானை வழிபட்டு வாழின், அவன் துணை யாவான் ஆதலின் அவனையே வழிபடுக` என்பது கருத்து. `வாழ்வும்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. செல்வத்தை ``ஒண் பொருள்`` என்றது, மனைவி முதலானோர் கருத்துப்பற்றி, `எமக்கு ஒண்பொருள் அளவு ஏது என்பர்` என மாற்றி உரைக்க. ``கூடலும் ஆமே`` என்றதற்கு, மேல், ``குதிக்கலும் ஆமே`` என்றதற்கு உரைத்த வாறே உரைக்க. ஈண்டும் ஏகாரத்தை ஈற்றசையாக்கி, `ஒண்பொருள்`; என்றதனைச் சிவபெருமானாகக் கொண்டு, `ஒண்பொருளாகிய அதனைச் செய்வார்கட்கு` எனக் கூட்டி உரைப்பாரும் உளர். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `உயிர்ச்சார்பாகிய சுற்றத்தாரையும், அவர் தந்நலத்தராதல் நோக்கிப் பொருட் சார்பாகிய செல்வத்தோடு ஒப்ப வைத்துத் துறக்க` என்பது கூறப்பட்டது.