ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை

பதிகங்கள்

Photo

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

English Meaning:
The Bee Stores Honey Only to be Appropriated
by Others; So is Your Hoarded Wealth
The industrious bee from flower to flower hops,
Seeking, scenting, gathering, its store of honey sweet;
But soon the subtle thief digs and steals the hoarded wealth;
Likewise, our earthly treasures the same story repeat.
Tamil Meaning:
ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங் களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.
Special Remark:
அஃதாவது, வலியுடையார் புகுந்து தம்மைத் துன்புறுத்தி விலக்கிவிட்டுக் கைக்கொள்ளத் தாம் யாதும் செய்ய மாட்டாது விலகியொழிவர் என்பதாம்.
ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு. -குறள். 1077
என்னும் திருக்குறளால், கீழ்மக்களது செல்வம் அவர்க்கும், சுற்றத்தார் முதலியோர்க்கும் பயன்படாது; வலிமையால் துன்பம் செய்வார்க்கே பயன்படும் என்பது விளங்கும்.
உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்றோய் மலைநாட,
உய்த்தீட்டுந் தேனீக் கரி. -நாலடியார் 10
என்ற நாலடி வெண்பாக் காணத்தக்கது. ``ஈட்டிய``, வினையெச்சம்.
இதனால், `செல்வம் கொடுத்தும், துய்த்தும் இன்புறாது இறுகப் பிடித்தவிடத்தும் நில்லாதொழியும்` என்பது கூறப்பட்டது.