
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
பதிகங்கள்

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
English Meaning:
Your Shadow is With You, Does it help You? How About Wealth Then?Foolish they who claim their wealth their own,
Seeing their own shadows to them useless though nearby;
The life that with the body comes as surely departs;
They see not; the light that lends lustre to the seeing eye.
Tamil Meaning:
தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப்பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!)பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.
Special Remark:
``தன்னது, என்னது`` என்றவற்றில் னகர ஒற்று விரித்தல். ``தனது, தனக்கு`` என்றவை, பன்மையொருமை மயக் கங்கள். மாடு - செல்வம். ``எனது மாடு`` என்றதன்பின், `எமக்கு உதவும்` என்பது எஞ்சிநின்றது. உன் உயிர், வினைத்தொகை. உயிரை, ``உன் உயிர்`` என்றதனால், `உடல், காணப்படுவது` என்பது பெறப் பட்டது. இவ்வாறு அவ்விரண்டன் தன்மைகளையும் எடுத்தோதியது `இயைபில், லன ஒரு நிமித்தத்தால் தம்முள் இயைந்தன; அந்நிமித்தம் நீங்கியவழி அவ்வியைபும் நீங்கும்` என்பது உணர்த்தற்கு. நிமித்த மாயது வினை. ``உடலோடு`` என உருபு விரிக்கப்பட்டது. ``போம்`` என்றதனைப் ``பிறந்தது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `ஒக்கப் பிறந்தது போம்` என்றது, `அவ்வாறு பிறவாதது போதல் சொல்ல வேண்டா` என்றற்கு. ``கண்ணது காணொளி`` என மிகுத்துக் கூறியது, `பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்றற்கு. தனது நிழல் தனக்கு உதவாமையை எடுத்துக் காட்டியது, தமக்கு உரியது தமக்குப் பயன்படாதொழிதலைத் தெளிவித்தற்காம்.``வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே``
-கந்தரலங்காரம்
என்ற அருணகிரி நாதர் திருமொழியும் காண்க.
இதனால், `செல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage