ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு

பதிகங்கள்

Photo

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 

English Meaning:
Agamic Truths in 18 Languages
In eighteen various tongues they speak
The thoughts which Pandits alone know;
The Pandits` tongues numbering ten and eight
Are but what the Primal Lord declared.
Tamil Meaning:
கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.
Special Remark:
`அவனன்றி ஓரணுவும் அசையாது` ஆதலின், உலகில் மொழிகள் பலவாய்த்தோன்றி வளர்தலும் சிவபெருமானது திருவுளத்தின்படியே எனவும், `அங்ஙனம் அவன் திருவுளம் செய்தது, தான், பிரணவர் முதலியோர், அனந்ததேவர், சீகண்டர், உமையம்மை முதலியோர்க்குச் சொல்லிய ஆகமப் பொருள்கள் நிலவுலகில் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் விளங்குதற்பொருட்டே` எனவும் கூறுவார், ``பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம் சொன்ன ஆறே`` என்றார். `சொன்ன ஆறே` என்பதில் ``சொன்ன`` என்றதை ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73) என்பதில் `இயைந்த` என்றதுபோலக் கொள்க.
ஆறு - வழி; வாயில். ``பதினெட்டுப் பாடை`` என்றது `மொழிகள் பதினெட்டு` என்னும் வழக்குப் பற்றி. எனவே, `பன்மொழியும்` என்பதே அதற்குக் கருத்தாகும். ஆரியம், தமிழ் இரண்டும் முன்னர்க் கூறப்பட்டமையின், `பன்மொழிகள்` என்றதில் அவை இரண்டும் ஒழிந்தனவே கொள்ளப்படும். ``கண்டவர்`` என்றது, ``அறிந்தவர்`` என்றபடி. `அவ்வம்மொழிகளில் வல்லோர் அவை வாயிலாக உயர்ந்த பொருள்களை மக்கட்கு உணர்த்துவாராதலின், அப்பொருள்களும் தமிழ்ச்சொல் வடசொற்களில் அமைந்த பொருளின் பகுதியவே; பிற அல்ல` என்பார், ``பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார்`` என்றார். ``கருத்தறிவார்`` என்றதனால், `அச்சொற்களை அறிதல் வேண்டும் என்பதில்லை` என்றவாறாயிற்று. அங்ஙனமாகவே, `அவற்றில் உள்ள பொருள்கள்` தமிழ்ச்சொல் வடசொற்களில் உள்ள பொருள்களின் பகுதியே என்பதும் உணர்த்தப்பட்டதாம். அதனானே, `தமிழும், ஆரியமுமே தொன்மை மொழிகள்` என்பதும், `பிறமொழிகள் இவற்றின் வழித்தோன்றின` என்பதும் போந்தன.
இதனால் வழிமொழிகளாகிய பிறமொழிகளும் பயனுடைய வாதலை அறிந்து அவற்றை இகழாமை வேண்டும் என்பது கூறப்பட்டது.