ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு

பதிகங்கள்

Photo

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 

English Meaning:
Agamas Revealed
The Infinite Siva revealing the Infinite Vast,
Came down to earth, His Dharma to proclaim,
The immortals, then, Him as Nandi adored,
And He stood forth as the Agamas entire.
Tamil Meaning:
சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.
Special Remark:
இஃது ஆகமங்கள் நிலவுலகிற்கு வந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறியது. பராபரம் - உயர்ந்ததும் தாழ்ந்தனவும் ஆகிய பொருள்; அவை பதியும், பசு பாசங்களுமாம். எனவே, `முப் பொருளின் இயல்பு` என்றவாறாம். தரனாய் - ஏற்ற பெற்றியில் நிற் பவனாய். இங்ஙனங் கூறவே, `சிவபெருமான் ஆகமங்களை முதற் கண் அனந்ததேவர் வாயிலாகச் சீகண்ட உருத்திரர்க்கு உணர்த்தி, பின்பு அவர் வாயிலாகத் தேவர், முனிவர், கணங்கட்கு உணர்த் தினான்` என்பது கொள்க.`வேதங்களை அனந்ததேவர் வாயிலாகப் பிரமதேவர்க்கு உணர்த்தினான்` என்ப. அரன் - உருத்திரன்; அஃது ஏற்புழிக் கோடலால், சீகண்ட உருத்திரரைக் குறித்தது. பரமசிவன் சீகண்ட உருத்திரராய் நிற்றல், அவரே தானாக அவருள் நிற்றல். சிவ தன்மம் - சிவபுண்ணியம். `அவை சரியையும், கிரியையும்` என்பது, ``நல்லசிவ தன்மத்தால் நல்லசிவயோகத்தால் நல்லசிவ ஞானத்தால்`` (திருக்களிற்றுப்படியார். 15) என்பவற்றால் அறிக. சிவதன்மங் கூறவே, இனம் பற்றிச் சிவயோகமும் கொள்ளப்படும். ``பராபரம், சிவதன்மம்`` என்றவை, ஏனையிடங்களிலும் சென்று இயையும். எனவே, சிவாகமங்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நாற்பாதங்களாய் உள்ளன என்பது உணர்த்தப்பட்டதாம்.
சிவாகமங்களில்,
சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமா மகேசுர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனி, நந்திதேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்புமுறைகளையும், திருக் கோயில் அமைப்பு, புட்ப விதி, பிராயச்சித்த விதி, பவித்திர விதி, செப மாலை யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு, அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியவற்றையும் கூறும் பகுதிகள் சரியாபாதம் எனவும்,
மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்டமண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய விசேட நிருவாண தீட்சைகள் ஆசாரியாபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும், பரார்த்தமும் ஆக அமைந்த நித்திய நைமித்திய பூசை முறைகள் விழா முறைகள் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் கிரியா பாதம் எனவும்,
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமையும், மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் சொல்லப்படும் பொருள்களைப் பாவனையாற்காணும் முறைகளும் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் யோக பாதம் எனவும்,
`பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள், அண்டகோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத்தின் இயல்புகள், வினைவகை வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படிநிலைகள், அவற்றின் பயன்கள் முதலிய வற்றைக் கூறும்பகுதிகள் ஞானபாதம் எனவும்
உணர்க.
சிவாகமங்களைச் சிவபெருமான் சொல்லியருளினமையைத் திருஞானசம்பந்தரும்,
``திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்``
-தி.2 ப.43 பா.6
எனக் குறிப்பிட்டருளினமை காண்க. இதனுள், ``அறங்கொண்டு`` என்றது, ``சார்ந்தாரைக் காத்தல் வேண்டுவதாகிய கடன் பற்றி`` எனப் பொருள் தரும். உரன் - உரம் உடையவன். உரம் - மெய்யுணர்வு, ``உரனென்னுந் தோட்டியான்`` (குறள். 24) என்பதிற்போல, ஓங்கி - ஓங்கப்பெற்று. ஓங்குதல் - விளங்குதல்.