ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு

பதிகங்கள்

Photo

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 

English Meaning:
Key To Mystery Of Life
Life takes its birth, stands preserved awhile,
And then its departure takes; caught
In that momentary wave of flux, Him we glimpse,
The Lord who in Tamil sweet and northern tongue
Life`s mystery revealed.
Tamil Meaning:
சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.
Special Remark:
``உயிர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``அவிழ்க் கின்றவாறு`` என்றார். ``அது`` என்றது, `அவ்வினத்தை` என்றவாறு. `சிமிட்டலை` எனவும் பாடம் ஓதுப. `உணரலும்` என்ற உம்மை, உணர் தற்கு அருமை குறித்து நின்ற சிறப்பும்மை. `ஆரியம், தமிழ் இரண்டனையும் உணர்தல் சிறப்புடைத்தாயினும் அஃது எல்லார்க்கும் கூடாமையின், ஒன்றை உணரினும் பயனைப்பெறுதல் தப்புதல் இல்லை` என்றவாறு. ஈற்றடி ஆசிடை வந்த மூன்றாம் எழுத்து எதுகை.