ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு

பதிகங்கள்

Photo

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 

English Meaning:
Nine Agamas
The Agamas so received are Karanam, Kamigam,
The Veeram good, the Sindam high and Vadulam,
Vyamalam the other, and Kalottaram,
The Subram pure and Makutam to crown.
Tamil Meaning:
மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.
Special Remark:
இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, `நாயனார் திருமொழியன்று` என்பது தெளிவாய்த் தெரிகின்றது. எவ்வாறெனில், `யாமளமாகும் காலோத்தரம்` என்பது பெரும்பான்மையும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் உள்ளது. அவ்வாறு கொண்டால், ஒன்பது கூறவந்தவர் ஒன்றனை மறந்தார் ஆவர். `யாமளம், ஆகும் காலோத்தரம்` என இரண்டாகக் கொள்ளினும், யாமளம் சைவாகம மன்று; வாம தந்திரம். அது சைவத்திற்குப் புறம்பானது. `காலோத்தரம்` என்ற பெயரில் பல உள. ஒன்றேனும் மூலாகமம் அன்று. அதனால், வாம மதத்தினர் ஒருவர் தமது தந்திரத்தையும் திவ்வியாகமங்களில் ஒன்றாக்கிக்கொள்ள இத்திருமந்திரத்தைத் திரித்துவிட்டார் போலும்! அவ்விடத்தில் நாயனார் கூறிய இரு ஆகமங்கள் இவை என்பது அறியப்படாது போயினமை வருத்தத்திற்குரியது. `நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்கள் ஒன்பது` என்பதற்கேற்ப அவர்பால் அவற்றைப்பெற்ற இந்நாயனார் இந்நூலையும் ஒன்பது தந்திரங்களாக அருளிச்செய்திருத்தல் அறியத் தக்கது. எனினும், ஒவ்வோர் ஆகமத்தையே ஒவ்வொரு தந்திரமாகச் செய்தார் என்பதற்கில்லை. ஏனெனில், அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் தொடக்கத்தில் `இன்ன ஆகமத்தைச் செப்புகின்றேன்` எனச் சொல்லித் தொடங்கி யிருப்பார். அவ்வாறன்றி முதற்கண் ``சிந்தைசெய்து ஆகமம் செப்ப லுற்றேனே`` எனப் பொதுப்படக்கூறி அமைந் தமையானே அது பெறப்படுவதாம்.
ஆகமங்கள் பலவும் தனித்தனி வேறு வேறு பொருளைக் கூறுவன அல்ல; எல்லா ஆகமங்களும் எல்லாப் பொருளையும் கூறு வனவே எனினும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் கூறுமாற்றால் வேறு வேறு ஆகமங்களாயின. ஆகவே, நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்களை உணரின், அனைத்து ஆகமங்களை யும் உணர்ந்ததாம். அவற்றின் பொருளையே கூறினமையால், இந் நூலை உணரினும் அனைத்து ஆகமங்களும் உணர்ந்தவாறாதல் அறிக.