ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து

பதிகங்கள்

Photo

வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.

English Meaning:
Jnana-Ananda Dance

The Vedas danced, the Agamas danced;
The melodies danced, the seven universes danced;
The elements danced, and the worlds entire danced;
With Nada Sakti the Lord danced,
The Dance of Divine Knowledge-Bliss (Jnana-Ananda).
Tamil Meaning:
(``அவனன்றி ஓரணுவும் அசையாது`` என்னும் பழமொழி. `அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது` என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன் அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும் தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும் அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது விளங்குகின்றது. அசைதல், அது அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல், `அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன` என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
`சொல்லும், பொருளும்` என அனைத்தப் பொருளும் இருவகைப்படும். சொல் `வழக்குச் சொல், செய்யுட் சொல்` என இருவகைத்து. செய்யுட்களும் முதல் நூல்களே தலையாயவை. ஆகவே அவற்றை வேதங்கள் ஆட, மிகும் ஆகமம் ஆட`` என எடுத்தோதவே, ஏனைய சொல்வகைகள் ஆடுதல் தானே அமைந்தது. சொற்கள் அசைதலாவது வழக்கிலும், செய்யுளிலும் நின்று பொருளுணர்த்தி வருதல். செய்யுட்கண் தம்மியல்பில் நிற்குங்கால் இயற்செய்யுளாயே நிற்கும். இசையோடு பொருந்தினால் இசைச் செய்யுளாய் முன்னையினும் இனிமையைத் தரும். அதனால், ``கீதங்கள் ஆட`` என அவற்றை வேறெடுத்தோதினார். அண்டம் - உலகம். உலகங்களை `ஏழ்` என்றல் வழக்கு. ``பூதங்கள்`` என்றது உபலக்கணத்தால் தத்துவம் அனைத்தையும் தழுவி நின்றது. புவனங்கள், உலகங்களை ஆட்சி புரியும் அதிகார தேவர்களுக்கு உரிய இடங்கள், `அவை இருநூற்று இருபத்து நான்கு என்பது சைவ சித்தாந்தம். நாதன் ஞானானந்தக் கூத்தினைக் கொண்டு ஆடினான்` என இயைக்க. கொள்ளல், மேற்கொள்ளல், ஞானத்தைக் கூறவே, அதனோடு உடன் நிற்பதாய உண்மையையும் கொள்ளப்படும். உண்மை அறிவு இன்பக்கூத்தே ஆனந்தக் கூத்து ஆதல் விளங்கும்.
இதனால் சிவனது உண்மையறிவின்பக் கூத்தே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்பட்டு பயன் விளைக்கச் செய்வது` என்பது கூறப்பட்டது.