ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து

பதிகங்கள்

Photo

பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

English Meaning:
Siva`s Cosmic Sway

The Universe of Elements Five,
The Universe of Elements Other,
The Universe of Bhoga,
The Universe of Yoga,
The Universe of Time,
The Universe of Mukti,
The Universe of Passions
The Universe of Appetites
—Over these universes
That He created,
Siva His sway holds,
The Five Acts performing;
Alone Seated as Tatpara,
In the Cosmos Entire—Brahmanda
Tamil Meaning:
`நிலையற்ற இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம், மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே தருவதாகிய நரகம்` என்றும் மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற, மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும் இடமாதல் பற்றி, `பிரமம்` எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில் அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன. அவை, `பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்` என்பன.
Special Remark:
இவை முறையே, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் அடங்கியுள்ளனவாம். ``மோகாண்டம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ``மோகாண்டம்`` என்பது முதலிய மூன்றிலும் ``அண்டம்`` என்றது உலகத்தை உலகத்தை. ``தாகாண்டத்து`` என்பதில் அத்துத் தொகுத்த லாயிற்று. `ஐங்கருமத்தால்` என உருபு விரிக்க. ஆண்டதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. `ஏக அந்தமாம் பிரமமாகிய அண்டத்தன பூதாண்டம் ... ... ... முத்தாண்டம்` என முடிக்க. `பிரமத்தை அண்டம்` என்றது இடமாதல் பற்றி.

``பூதாண்டம்`` என்பதில் ``பூதம்`` என்றது யாவரும் நன்கறிந்த பிருதிவியை. ``பேதம்`` என்றது அதற்குமேல் அப்பு முதல் பிருகிருதி முடிய உள்ளவற்றை. ``போகம்`` என்பது போக்தா. (நுகர்வோன் மேலதாய்ப் புருட தத்துவத்தையும் அதற்குக் காரணமான மற்றை வித்தியா தத்துவங்களையும் குறித்தது.) யோகாண்டம், தவத்தோர் அடையக் கூடிய வித்தியேசுர புவனங்கள். அவை `சுத்த வித்தை ஈசுரம், சாதாக்கியம்` என்னும் தத்துவங்களில் உள்ளன. முத்தாண்டம், அபர முத்தித் தானங்களாகிய சிவதத்துவ, சித்தி தத்துவ புவனங்களை தோற்ற முறையில் இவை முற்பட்டனவாதல் பற்றி ``மூதாண்டம்`` எனப்பட்டன. ``மூதாண்டம்`` என்பது, ஏனைய வற்றோடு இயைந்து இன்னோசை தர வேண்டி, ``மூதாண்டம்`` என நீட்டல் பெற்றது. ``மோகாண்ட தேகாண்ட தாகாண்டம்``, உம்மைத் தொகை தற்பரத்து - தற்பரமாம் தன்மையையுடைய. அத்தன்மை யாவது உயிர்கள் அனைத்திற்கும் மேலானதாதல்.
`இவ் ஐங்கலைகளிலும் சிவனது ஆனந்தக் கூத்து நிகழ்கின்றது` என்பது கருத்து. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
இதனால் ஆனந்தக் கூத்தின் வியாபகம் கூறப்பட்டது.