ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து

பதிகங்கள்

Photo

ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.

English Meaning:
It is Bliss

Bliss is His Dance Arena;
Bliss the Song`s melody;
Bliss the music`s refrain;
Bliss the musical organs;
Bliss for the creation entire,
Bliss too for Lord,
Who the Ananda Dance dances.
Tamil Meaning:
`ஆனந்தம்` என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப் பொருள், ஆருயிர்களுக்கு அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு அந்நிலையில், `மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி` என்பதுபோல, உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்; பாட்டுக்களும் ஆனந்தமாய்; பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்; இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப் பொருள்களும் ஆனந்தமயம்.
Special Remark:
வாச்சியம் - சொற்பொருள். `ஆனந்த வாச்சியம் ஆனந்தமாக, ஆனந்தக் கூத்து உகந்தானுக்கு என்பவற்றை முதலில் கூட்டியுரைக்க. ``ஆனந்தம் ஆக`` என்றது, `உண்மையில் ஆனந்த மாகும்படி` என்றதாம். உண்மையாவது, அனுபவம் அகத்தல், தன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ஆனந்தத்தை விளைப்ப வற்றையும், பெறுபவற்றையும் ஆகுபெயரால் ``ஆனந்தம்`` என்றார். ``சராசரம்`` என்றது அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. ``சராசரம்`` என்ற அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. `எஞ்ஞான்றும் எல்லாப் பொருள்களும் முதல்வன் வழியாவனவற்றி வேறாவன அல்ல` என்பதாம். `பூவோடு சேர்ந்த நாரும் மணங் கமழும்` என்பது போல, `ஆனந்தக் கூத்தோடு இயைந்த அனைத்தும் ஆனந்தமாம்` என்பது கருத்து. பராகாசத்துள் நிகழும் ஆனந்தக் கூத்தின் இயல்பு இது வாகலின், அதுதானே இவ்வுலகில் நிகழுமிடத்தும் இவ்வியல்பினதேயாம்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி``
என்ற ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலையை இங்கு நினைவு கூர்க.
இதனால், சிவானந்தக் கூத்தினால் எல்லாப் பொருளும் ஆனந்தமாய் விளங்குதற் பயன் கூறப்பட்டது.