ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.

English Meaning:
No More Knower and Known in Parapara

Paraparan is the end and beginning,
He is Parapara for each and every one;
He absorbed Para and us Jivas;
And at end of Jnana-Jneya relationship
As Jnathru, He, Nandi was;
This, indeed, is our comprehension-beyond.
Tamil Meaning:
சிவபெருமான், அனைத்துப் பொருள்கட்கும் அந்தமும், ஆதியுமாய் உள்ள பெரும் பொருளாய் நின்று, பல உயிர்களும் அடையும் பலவேறு அவத்தைகளில் தடத்த சிவனாய் எல்லாம் அவற்றிற்குத் தலைவனாய்ப் படிமுறையால் அவைகளை உயர்த்தி, முடிவில் சொரூப சிவனாய் அவனது ஞானமே கண்ணாக உணரும் ஞானத்திற்கு ஞேயமாய் இருக்கின்றான். அவனது செயல்களை நாம் அறுதியிட்டு அறியமாட்டோம்.
Special Remark:
``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. `இயற்கையில் அந்தமும், ஆதியும் ஆகும் பராபரனும், உயிர்களின் அவத்தை வேறுபாடுகளில் தத்தமக்குப் பராபரனும், முடிவில் தன்னில் தான் ஆன பரமும் ஆகி நம்மை உண்டு, அந்தத்து ஞானத்திற்கு ஞேயமாய் இருந்தனன். அவற்றை யெல்லாந் நாம் அறியோம்` என இயைத்து முடிக்க உண்ணுதல் மேற்கூறிய வேழம் உண்ட விளங்கனிபோல ஆகும்படி உண்ணுதல். `ஆதலுடன் கூடி` என முன்னும் பின்னும் ஓரோர் சொல் வருவிக்க. ஆதல் - ஆதற்றன்மை.
இதனால், சிவன் உலகை உண்ணும் முறைகளையெல்லாம் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.