ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
படரும் சிவசத்தி தானே பரமாம்
உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

English Meaning:
Total Merging

When body and Jiva
As unbroken unite (in Yoga)
Then shall Grace of Siva Sakti be;
Then does Jiva, Param become;
Jiva that leaves this body,
Pervasive then becomes;
With beginning and end none
In Siva forever it merges.
Tamil Meaning:
உடம்பும், உயிரும் நீக்கமற ஒன்றியிருக்கும் பொழுது, உலகத்தை நோக்கிச் செல்லும் சிவ சக்தியே உயிருக்குத் தலைமையாய் நின்று நடத்தும். உடலை அறவே விட்டொழித்தவழி, உயிர் சிவனைப் போலப் போலவே எங்கும் இருப்பதாய், முடிவும், முதலுமாகிய எல்லைகளில் எதுவும் இன்றி வியாபகமாய்ச் சிவனது வியாபகத்தில் அடங்கிவிடும்.
Special Remark:
ஆகவே, `சிவன் உயிரை உண்கின்றான்` என்றல் பொருந்துமாறு அறிக என்பதாம். திருவாசகத்தில் `உயிருண்ணிப் பத்து` என ஒரு பகுதியிருப்பதும், ``யானாகிய என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``9 என்றதும் இங்கு நினைவு கூரத்தக்கன. `விட்டவழி` என்பது, ``விட்டு`` எனத் திரிந்து நின்றது.
`பெத்த காலத்தில் திரோதான சத்தி வழிப்பட்டு ஏதேசியாய்ப் போக்கு வரவு புரிகின்ற உயிர் முத்தி காலத்தில் ஏகதேசத் தன்மை நீங்கி வியாபகமாய்ச் சிவத்தில் அடங்கும்` என்பது இம்மந்திரத்தின் கருத்து. ``உடல்`` என்ற பொதுமையால் மூவகை உடம்பும் கொள்க.
இதனால், `உயிர் ஒடுங்குதல் இல்லை எனல் வேண்டா` என்பது கூறப்பட்டது.