ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

English Meaning:
Beyond Siva Turiya

A like the wood-apple
By ``elephant`` disease consumed*,
So are Jiva and Para before Siva;
In the rare state beyond Siva Turiya
Is Supreme Siva
That engrosses worlds all.
Tamil Meaning:
`சீவ அவத்தை, சிவ அவத்தை, பர அவத்தை` என மேற்கூறிய மூன்று அவத்தைகளிலும் அரியனவாம் துரிய நிலையில் சிவபெருமான் அனைத்துலகங்களையும், அவற்றில் வாழும் உயிர் -களையும் அவற்றது முன்னை இழிநிலை மாறி, உயர்நிலையாகும்படி விழுங்கிவிடுவான்.
Special Remark:
`யானை` என்பது விளம்பழத்திற்கு உண்டாகின்ற ஒரு நோய். அஃது அப்பழத்தின் ஓடு இருந்தபடியே இருக்க, உள்ளே உள்ளதை மட்டும் அழித்துவிடும். அதனால், வெளிப்பார்வைக்கு மட்டும் நன்றாய் இருப்பதுபோலக் காணப்பட்டு, உட்பகுதியில் ஒன்றும் இல்லையாய் விடுகின்ற பொருள்கட்கு, `வேழம் உண்ட விளங்கனிபோல` என்னும் உவமை கூறப்படுகின்றது. அஃது இங்குத் தம் தன்மை திரிந்த மாயா காரியங்கட்கும், அவற்றைப் பற்றி நிற்கும் உயிர்கட்கும் உவமையாகக் கூறப்பட்டது. உயிர் - சீவன். `சீவன், சிவம், பரம்` என்பன அவ்வவ் அவத்தைகளைக் குறித்து நின்றன. செய்யுள் நோக்கி, இறுதிக்கண் நிற்றற்பாலதாய பரம் இடைக்கண் வைக்கப் பட்டது. முன் ஓதும் - மேலே சொல்லப்பட்ட. `உயிரும், சிவமும், பரமும் ஆன துரியத்து` என்க. ``அகிலம்`` என்றது மாயா காரியங்களையும், எல்லாம்`` என்றது உயிர்களையும், அங்ஙனம் கொள்ளாக்கால், ``எல்லாம்`` என்றது கூறியது கூறலாம். திரிய - தம் நிலை மாறும்படி. விழுங்குதல், இங்குத் தன் தன்மைய ஆக்குதல். உயிர் பெத்தத்தில் நிற்கும்பொழுது அதற்குச் சார்பாய், உள்ள மாயா காரியங்கள் பசுகரணங்களாயும், முத்தியைப் பெற்ற பொழுது அவை பதி கரணங்களாயும் நிற்கும். இவ்வாறு ஆதலையே ``திரிய`` என்றார்.
``மாயைமா யேயம், மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``.l
என்னும் சிவப்பிரகாசச் செய்யுளைக் காண்க. முத்தி, இங்குப் பரமுத்தி தவிர ஏனைய. ``கரியுண் விளவின் கனி`` என்ற உவமையால் இது விளங்கும். முன்னர் ``இரும்புண்ட நீர்`` என வேறு உவமை கூறப்பட்டவாறு அறிக.
இதனால், சிவன் உலகத்தையும், உயிர்களையும் அவற்றின் தன்மைகளைத் திரித்துத் தன்வண்ணம் ஆக்குதல் கூறப்பட்டது.