ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

English Meaning:
Absolute Union

Even as shadow disappears with body,
Even as bubble returns into water,
Even as flame of camphor leaves traces none,
So is it when Jiva into Param unites.
Tamil Meaning:
விரையத் தோன்றி மறைகின்ற சாயா புருடனைப் போலவும், சிறிது நின்று கெடுகின்ற நீர்க்குமிழி போலவும், சிறிது நீட்டித்துக்கெடுகின்ற, தீயிடைப்பட்ட கருப்பூரத்தைப்போலவும், அசுத்தத்தைப்பொழிகின்ற தூலவுடம்பும் ஒரு காலத்தில் சிவத்தில் ஒடுங்குவதேயாம்.
Special Remark:
தத்துவ முறைப்படி தத்துவங்களில் தோன்றும் உடம்புகள் தோன்றிய தத்துவங்களிலே மீள ஒடுங்கத் தத்துவங்கள் மாயையில் ஒடுங்கும் ஆகலின், அவை மாயைக்கு வியாபகமான சிவத்தில் ஒடுங்குவதேயாம்` என்றபடி.
``இவ்வுடம்பு`` எனத் தூல உடம்பையே சுட்டினாராயினும், உபலக்கணத்தால் சூக்கும அதிசூக்கும உடம்புகளும் கொள்ளப்படும்.
சாயா புருடன், நின்மலமாகிய வானத்தை உற்று நோக்குங்கால் அதன்கண் உள்ள ஒளி மண்டலத்தின் ஒரு கூறு மனிதனைப் போலத் தோன்றும் வடிவம். இது மிக விரைவில் மறைதலால் விரையக் கெடும் உடம்பிற்கு உவமையாயிற்று.
சாயா - சாயை; நிழல். ஒளி மண்டலத்தின் ஒரு கூறே புருடன் வடிவற்றாய்த் தோனஅறுதலின், அஃது இல்லதன்று; உள்ளதே. அஃது ஒடுங்குதல் ஒளிமண்டலத்திலேயாம். காணின் - காணுதலைப் போல. `இன்` உவம உருபு. நீர்க்குமிழி நீரில் தோன்றி நீரில் ஒடுங்குதல் வெளிப் -படை. கருப்பூரம் - பச்சைக்கருப்பூரம். அது கூட்டுப் பொருளாகலின், அதன் கூறுகள் ஆற்றலாய் மாறி அவ்வப் பொருள் ஆற்றலில் ஒடுங்கும்.
இங்ஙனமாகவே, `உடம்புகளை இறைவன் ஓடுக்குதல் இல்லை` எனல் வேண்டா என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உம்மைகள் விரிக்க.
இதனால், உடம்புகள் ஒடுங்குமாறு உவம அளவையால் நிறுவப்பட்டது. `தோற்றம், ஒடுக்கம்` என்பவற்றில் இங்கு வேண்டுவது ஒடுக்கமேயாதல் அறிக.