ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்

பதிகங்கள்

Photo

பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

English Meaning:
When Jiva Becomes Para

Jiva becomes Para;
That Para pervasive stands;
Immanent too in all creation it is;
A mighty Power it is,
That can dissolve and create universes vast;
This was the boon granted to me;
And thus is my state exalted.
Tamil Meaning:
சிவன் வியாபகன்; மாற்றம் இல்லாதவன் எவ்விடத்திலும், எப்பொருளிலும் நிறைந்து அதனால், தனது ஆற்றலால் சுத்தமும், அசுத்தமும் ஆய இரு மாயா காரியங்களிலும் தனது ஆற்றலால் தங்கி அவற்றைத் தன்னுள் ஒடுக்கவும் செய்வான். பின்பு விரிக்கவும் செய்வான். நான் மேல்நிலை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந் திருத்தற்குக் காரணம் இந்த உண்மையை இவ்வாறு உணர்ந்ததே.
Special Remark:
`அதனால் நீவிரும், இதனை, இவ்வாறே உணர்மின்; மேல்நிலையை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந்திருப்பீர்` என்பது குறிப்பெச்சம்.
``எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்`` என்றது, `வியாபகன்` என்றபடி. பின்னர் வந்த ``எங்கும்`` என்பது, `எப்பொருளிலும்` என்றதாம். உரன் - ஆற்றல். `உரனால்` என உருபு விரிக்க. வரன் வரம்; மேன்மை. `யான் வரனில் வாழ்ந்துற்றவாறு இங்ஙன் கண்டு` என முடிக்க. `உமிழும்` என்பது இடைக்கண் வேண்டாவழிக் குகரச் சாரியையும்` சந்தியும் பெற்று, `உமிழ்க்கும்` என வந்தது.
இதனால், `மெய்யுணர்வோர், உலகத்தை இறைவன் ஒடுக்கியும், தோற்றுவித்தும் நிற்கின்றான் என உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.