ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்

பதிகங்கள்

Photo

அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

English Meaning:
Asi-Pada Experience

When Jiva and Para
Reach Asi-Pada State
And in pervasive Siva merge,
Then as sweetness compounded
Of milk, honey, and ambrosia
Will He in the Silence agreeable appear.
Tamil Meaning:
`துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.
Special Remark:
பரம், சிவம் இரண்டும் ஒன்றாயினும் பொதுவும், சிறப்புமாகிய உணர்வு வேறுபாடு பற்றி வேறுவேறாகக் கூறினார். பரமாதல் வேதாந்த ஞானத்தாலும், சிவமாதல் சித்தாந்த ஞானத்தாலும் என்க. `அசிபதத்தால்` என மூன்றாவது விரிக்க. ``ஏய்ந்து`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கணு - வேற்றுமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இணை - ஒப்பு. பால், ஓரளவு இனிப்புடையது. தேன், மிக இனிப்புடையது. ஆகவே அவை முறையே ஆன்மாவிற்கும், பரத்திற்கும் உவமையாம். அமுது உறுதி பயப்பது. ஆகவே, அது சிவத்திற்கு உவமையாம். இன்பத் துணை - இனிய பொருள்களின் கலப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் அனுபவச் சிறப்புக் கூறப்பட்டது.