ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்

பதிகங்கள்

Photo

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

English Meaning:
The Jnana Sun is Within and Without

The Sun that rises in firmament vast
Stands within too shedding rays divine;
In directions eight he traverses constant;
Yet in them that Truth know
He stands for ever fixed within.
Tamil Meaning:
அண்டத்தில் ஒரு வட்ட வடிவினனாய்க் காணப் படுகின்ற ஆதித்தன் உலகில் எட்டுத் திக்கிலும் சென்று அலமருவார்க்கு அவர் சென்ற இடத்தில் எல்லாம் காணப்பட்டு ஒளியை வழங்குவான். வெளியில் அங்ஙனம் அலமரும் நிலையை விட்டு முன் மந்திரத்தில் கூறிய நுண்ணிறிவை அறிந்து அகத்தே நோக்குபவர்க்கு அவன் உட்பினுள் காண்கின்ற பல இடத்திலும் விளங்கி ஒளிதருகின்றவன் ஆவான்.
Special Remark:
`புறநோக்கு உடையவர்க்கு அண்ட ஆதித்தனே ஆதித்தன் ஆவதுபோல அகநோக்கு உடையவர்கட்குச் சிவனே ஆதித்தனாய்த் தோன்றுவான்` என்றபடி. `என் தாய் என் சிற்றன்னை யாயினாள்` என்று ஒருவன் சொல்வானாயின் அச்சொல்லில் `ஆயினாள்` என்பது `தாய்க்கு உரிய இடத்தைச் சிற்றன்னை பற்றி நிற்கின்றாள்` என்பதே பொருள் ஆதல் போலவே `ஆதித்தன் கதிரொளியான்` என்பதற்குப் பொருள் கொள்க. `கண்ட இடம், சென்ற இடம், நின்ற இடம்`` என்பவற்றில் பெயரெச்சத்து அகரங்கள் தொகுத் தலாயின. ``கண்ட இடம்`` என்றது ஆறு ஆதாரங்களை. ``உள்ளே`` என்பதன் பின் `காணப்படும்` என ஒரு சொல் வருவிக்க. ``உள்ளே காணப்படும் கதிரொளி`` என்றதுமுன் மந்திரத்திற் கூறப்பட்ட நேரறிவை, ``சென்றிடத்து`` என்பதனை முதலிலும், ``நிலை`` என் பதனை ``வரும்`` என்பதன் பின்னும் கூட்டுக. `மழை நின்றது` என்றல் போல `நிற்றல்` இங்கு ஒழிதலைக் குறித்தது. ``நின்றிடத்துக் கதிரொளி யாயிடும்`` என்றதனால், `சென்ற இடத்தே மகிழ்ந்தெழுதல் நில்லா தவர்க்கு` என்பது பெறப்பட்டது. முதலடி இன எதுகை.
இதனால், அகநோக்குடையார்க்குச் சிவன் உள்ளொலியாய் விளங்குதல் கூறப்பட்டது.