ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்

பதிகங்கள்

Photo

தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

English Meaning:
Siva is the Light Resplendent

With His peerless rays
He dispelled my darkness;
And the divine fruit`s honey within flowed;
Beaming with benevolent rays
As Lord of Kailas, He stood;
Within me too He stood aloft
As Light Resplendent.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறியபடி உயிர்களது இருளை நீக்கவேண்டி அவற்றினுள்ளே உள்ள சிவனது, `திரு` எனப்பட்ட ஒப்பற்ற ஒளி தாக்கிப் பரவுதலால் அவ்விடத்துள்ள இருளாகிய மலம் நீங்கும். அது நீங்கினால் அந்த ஒளிக்கு மேலே உள்ள சிவமாகிய அரிய கனியின் சாறு அக்கனியினின்று வெளிப்பட்டு ஒழுகி இனிக்கும் அப்பொழுது ஊழிக் காலத்தும் அழியாத ஒளியினதாய் விளங்கும் கயிலாய மலைமேல் சிவன் நண்ணிப் பேரொளியுடன் திருமேனி கொண்டு வீற்றிருக்கும் காரணமும் விளங்கும்.
Special Remark:
எற்றுதல் - தாக்குதல். தாவுதல் - பரவுதல் `தாய்` என்பது, `தாவ` என்பதன் திரிபு. இவ்வாறன்றி, `நீக்க`, எனப் பாடம் கொள்ளுதலும் ஆம். ``அண்ணித்திடும்`` என்பது திரிந்ததும், `கன்னி` என்பது இடைக் குறைந்ததும் எதுகை நோக்கியாம். சிவத்தை, `ஈசன் எனுங்கனி`` * என அப்பர் அருளிச்செய்ததும் இங்கு நோக்கத்தக்கது. கன்னி - அழியாமை. ``ஊழிதோறூழி மற்றும் உயர் பொன்னொடித் தான் மலை``* என அருளினமை காண்க. வண்ணம் - வகை; காரணம் ``ஆம்`` என்றது, `விளங்கும்` என்றபடி. `கயிலையில் ஈசன் உருவத் திருமேனியுடன் வீற்றிருத்தல் நிலவுலகத்து உயிர்களை உய்வித்தற் பொருட்டு என்னும் உண்மை அனுபவமாய்த் தோன்றும்` என்பதாம்.
இதனால், முதல்வன் உயிர்க்குயிராய்க் கலந்து நின்று செய்யும் பேருதவி விளக்கிக் கூறப்பட்டது.