ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்

பதிகங்கள்

Photo

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

English Meaning:
In the Five Kalas Arise the Five Sound Forms

The Sound that arises
When Sun within dawns
Is emanation from Para Nada;
The Sounds Five, Vaikhari and rest
That to Para Bindu belong
Arise in Kalas Five, one in each.
Tamil Meaning:
ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்று வதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத் தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலியவாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.
Special Remark:
உள்ளம் - ஆன்ம அறிவு. `அருணோதயத்திற்கு` என நான்காவது விரிக்க. `வள்ளலால்` என மூன்றாவது விரித்து, அதனை ``ஒன்றும்`` என்பதனோடு முடிக்க. ``பர விந்து வாக்கு`` என்பது, பர விந்துவினின்றும் தோன்றும் வாக்கு` என ஐந்தாம் வேற்றுமைத் தொகை. இங்கும், `வாக்கால்` என உருபு விரிக்க. `ஐங்கலைக்கும் ஒன்றும் உதயம் உள்ளன` என மாறிக்கூட்டுக. உதயம் - ஒளித் தோற்றம். கலைகளின் பன்மைபற்றி உயத்தையும் பன்மையாகக் கூறினார். ``வைகரி யாதி`` என்றது ஒடுக்கமுறை பற்றி. இவற்றிற்குப் பரவிந்து பரம்பரையால் காரணமாகும் என்க.
`தூல வைகரி` சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குக்கள் முறையே `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் நின்று ஆங்காங்குள்ள உயிர்கட்கு உணர்வைப் பிறப்பிக்கும் என்பதை,
``நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளானும் உணர்க.
இதனால், சொல்லுலகம் அனைத்திற்கும் `விந்து` எனப்படும் சுத்த மாயையே காரணமாதல் கூறப்பட்டது.