ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்

பதிகங்கள்

Photo

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

English Meaning:
Siva Dispels Darkness

He is the Truth,
Unreal He is not;
He is the Lord of the Universe;
My Father;
He is the Sun, Moon and Fire that darkness dispel;
He dispels too the darkness of Karma,
He, the Nandi Holy, to me appeared
The darkness of my low desires to dispel.
Tamil Meaning:
முன்மந்திரத்திற் கூறியவாறு சதாசிவ மூர்த்தியாய் நின்று ஐந்தொழில் நடாத்தும் முதல்வன் அவ்வாறு தொழில்புரிய நிற்பதற்கு முன்பே என்னை இயல்பாகவே பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு என் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, அதன் பின்பு தொழில் புரிய எழுந்தான்.
Special Remark:
நந்தி - சிவபெருமான். ``பொய்யிலன்`` முதலிய குறிப்பு வினைப் பெயர்கள் பலவும் அவனையே குறித்து நின்றன. பொய் - பொய்போலத் தோன்றுகின்ற அறியாமை. மெய். உள்ளதாய்த் தோன்றுகின்ற அறிவு. புவனங்கள் ``புவனா`` எனப் பெண்பாலாகச் சொல்லப்பட்டன. மையிருள் - மை போல்வதாகிய இருள். கண்ணிற்குப் புலனாவது போலத் தோற்றுகின்ற இருள். இஃது உலகை மறைக்கும் புற இருள் மனமொழி மெய்களால் செய்யப்படும் இருள்; வினை இருளாகிய மலம் காரணமாக விளைவதனை ``இருள்`` என்றார். ``இருள்சேர் இருவினை`` * என்றது காண்க. `இவ்விருளை நீக்கும் திருமுச்சுடர்கட்கு இல்லை` என்பதை நினைவூட்டுதற்கு அவற்றின் இயல்பை எடுத்துக் கூறினார். திரு - மேன்மை; சத்தி கைத்தல் - வெறுத்தல், பின்பு ``எழுந்தான்`` எனக் கூறியதனால், `கலந்தமை அதற்கு முன்னே` என்பது பெறப்பட்டது இந்நிலை, `அனாதி` எனப்படும். ``என்`` என நாயனார் தம் நிலையையே கூறினா ராயினும் அஃது அனைத்துயிர்களின் நிலையையும் பற்றியதேயாகும்.
இதனால், முதல்வன் அனாதியே உயிர்களில் உள்ளுயிராய்க் கலந்து நிற்றல் கூறப்பட்டது. அவ்வாறு கலந்து நிற்றலானே, `அவை களின் இருளை நீக்குதல் வேண்டும்` என்னும் இரக்கமும், அது பற்றிச் செய்யப்படும் தொழில்களும் முதல்வனுக்கு உளவாயின என்க.