ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

பதிகங்கள்

Photo

மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

English Meaning:
Sun`s Course in the Higher Adharas

Breaking through the Earth (Muladhara)
He penetrates beyond into the Adharas that
Are Sky (Visuddhi) and Space (Ajna) within;
He is the very source of joy that dazzles the eye;
He indeed responds to contemplation sweet.
Tamil Meaning:
ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.
Special Remark:
`ஆகையால், அவனை வழிபடாதொழியின் அஃது உயிர்கட்குக் குற்றமாம்` என்பது கருத்து. `ஆதித்தனது உதவியை முதலிற் பெற்றே பின்பு உயிர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலும் ஆதலின், அதுபற்றி அவனை வழிபடுதல் முதற்கண் செய்யத் தக்கது` என்றற்கு அவனது செயலை இங்ஙனம் வகுத்துக் கூறினார். இதுவும் ஆதித்தனது புறநிலை அகநிலை இரண்டிற்கும் பொருந்தக் கூறியதேயாம். அவற்றுள் புறநிலைப் பொருள் வெளிப்படை. அதனுள் ``விண்``, வெட்டவெளி. அகநிலையில் மண், மேற்கூறிய வாறு மூலாதாரம். விண், அது முதலாக மேன்மேல் உள்ள ஆதாரங்கள். கண், மனக்கண். ``களி தந்த`` என்றதனால், களி தருதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. ``ஆனந்தம் எண்ணும்`` என்றது, அது பற்றி அவனை எண்ணும் காரியத்தை உணர்த்தி நின்றது.
இதனால், ஆதித்தனது உதவி இன்றியமையா முதல் உதவியாதல் கூறும் முகத்தால், அவனை முதற்கண் வழிபடுதல் கடப்பாடாதல் கூறப்பட்டது.