ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

பதிகங்கள்

Photo

பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற ஓங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

English Meaning:
Sun is the Primal Energy

The Sun is Vishnu;
He is Siva Holy too,
Who as refuge of all creation stands;
He brings prosperity to the seven worlds in accord;
He, the Beginning of all lives.
Tamil Meaning:
ஆதித்தனாலே உலகுயிர்கள் இறைவாது வாழ்தலால், அவன் காத்தற் கடவுளாகிய மாயோனாக ``சூரிய நாராயணன்`` என்று சொல்லப்படுகின்றான். அதனால் அவனே எல்லா உயிர்கட்கும் புகலிடமாகின்ற முதற்கடவுளும் ஆகின்றான். இன்னும் உயிர்கள் நால்வகை யோனிகளுள் கருவாகித் தோன்றுதலும் ஆதித்த னாலே யாகலின் அவனே அனைத்துயிர்கட்கும் முதலுமாவான்.
Special Remark:
``ஏழுலகும் உற`` என்றது, `நால்வகை யோனியுட் பட்ட அனைத்துயிர்களும் தோன்ற` என்றபடி. ஏழுலகும் இகலற ஓங்குதலாவது, ``ஆதித்தனாலேதான் அனைத்து உயிர்களின் பிறப்பும், வாழ்வும் அமைகின்றன` என்பதை யாவரும் ஒருமுகமாக உடன்பட்டுப் போற்றப்படுதல். ஆதித்தனை, ``பலர்புகழ் ஞாயிறு``3 என ஆன்றோர் புகழ்ந்தவை அறிக. ``ஆதியும்`` - என்னும் உம்மை உயர்வு சிறப்பும்மை. `அனைத்துலகங்களிலும் ஆதித்தர் உளர்` என்பதை இங்கு நினைக்க.
இதனால், ஆதித்தன் உயிர்கட்குத் தோற்றமும், நிலையுமாதல் கூறப்பட்டது.