ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்

பதிகங்கள்

Photo

ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

English Meaning:
Worship Sun, Primal Lord Blesses

Chant in love the thousand names of Sun,
He in you as spark divine glows;
The Vedic Brahmins pray,
The Celestial immortals his name chant;
It is the Lord Primal verily
Who blesses all.
Tamil Meaning:
ஆதித்தனை ஆயிர நாமங்கள் விண்ணவர் சொல்லி வேண்டினாலும், வேதியர்சொல்லி வேண்டினாலும் அவையெல்லாம் சிவபிரானிடத்தில் அன்புதோன்றி முதிர்வதற்கு வழியாகவே அமையும். ஏனெனில், ஆதித்த மண்டலத்தின் ஒளிக்குள் ஒளியாய்ச் சிவபிரானே நிற்றலால்.
Special Remark:
இரண்டாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``நிற்கும்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க. அப்பயனிலையின் பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. சிவபிரானது அட்ட மூர்த்தங்களில் ஆதித்தனும் ஒன்றாகலின் ``சோதியினுள்ளே சுடரொளியாய் நிற்கும்`` என்றும், அதனை அறியாது ஆதித்தனையே வழிபடுபவர்க்கும்,
``யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்`` l
என்றடி பயன் தருபவன் சிவபெருமானே யாகலின், `அவன் அவர்க்குத் தன்னை உணரும் உணர்வைச் சிறிது சிறிதாக விளங்கச் செய்வன்` என்பது பற்றி, ``ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே`` என்றும் கூறினார்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ`` *
என்று அருளிச் செய்ததை காண்க. சிவநெறியாளர் சூரியனை நேரே கண்டு வணங்கும்பொழுது அவனது ஒளிமண்டலத்தில் சதாசிவ மூர்த்தி எழுந்தருளி யிருத்தலை நினைன்தே வணங்குவர். சிவபிரானே ஆதித்தனாய் நின்றும் உலகிற்கு உதவுதல் பற்றியும், அவ்வுதவியின் முதன்மை பற்றியும் சிவபூசையில் முதற்கண் சூரியபூசை விதிக்கப் பட்டுள்ளது. அவ்விடத்துச் சூரியன் சிவ சூரியனாகவே பூசிக்கப் படுவான்.
``காண்பவன் சிவனே யானால்
அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்``l
என்றது காண்க. `ஆதித்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. வேதியர் பூதராய்க் காட்சிப்படுதல் பற்றி முன்னர்க் கூறினார். ``நாமங்கள்`` என்பதனோடு இனிதியைய, ``விண்ணவர் சொல்லினும்`` என்பது முன்னர்க் கூட்டியுரைக்கப்பட்டது. `வேண்டுதல், சொல்லுதல்` என்பவற்றை ஏனையோர்க்கும் கூட்டுக.
இதனால், ஆதித்த வழிபாடும் ஓராற்றால் சிவ வழிபாடாதல் கூறப்பட்டது.