ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி

பதிகங்கள்

Photo

தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.

English Meaning:
Siddha-Hood

Thus in the world they will be
And in Siva Yoga again be;
And as Siva Yogin in Bindu merge,
Many miraculous powers attain;
The Siddha-hood their body reaching.
Tamil Meaning:
மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.
Special Remark:
``விந்து`` என்றது உபலக்கணமாய் ஏனைக் கலைகளோடு கூடிய பிராசாத மந்திரத்தைக் குறித்தது. `இம்மந்திர வழிச் செய்யப்படும் யோகமே சிவயோகம்` என்பது இங்கு இனிது விளக்கப் பட்டது. எனவே, முன் மந்திரத்தில் ``மாயோகம்`` என்றதும் இதுவேயாயிற்று. `வந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
`காயமும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், `முன்மந்திரத்திற் கூறியவாறு மாயோகத்தைப் பெறுதற்குமுன் சிலர் காய சித்தியைப் பெற்று நெடுங்காலம் மண்ணிலே இருத்தலும் உண்டு` என்பது கூறப்பட்டது. காய சித்தியைக் கூறவே ஏனைச் சித்திகளையும் பெற்றிருத்தல் பெறப்பட்டது.
``தவமும் தவமுடையார்க் காகும்`` * என்றபடி, யோகம் முதிரப் பெறுதலும், சிவயோகம் கூடலும் முற்பிறவியில் பழகினோர்க் கேயாம் என்பதும் இதனால் பெறப்படுமாறு அறிக.