ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி

பதிகங்கள்

Photo

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

English Meaning:
Soul`s Journey after Yoga-Samadhi Attained

When the Yogi his mortal coil shuffles,
During the phase when the Crescent moon waxes
He (the soul) shall reach the world of Devas;
There for a while abiding,
Into the Sphere of Sun he subsides;
Thence He reaches the Sphere
Where the Souls of Ancestors dwell;
And from there, finally in the Sphere of Moon, he abides.
Tamil Meaning:
இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புற உடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தஹ்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.
Special Remark:
ஈற்றடியில் உள்ள ``யோகி உடல் விட்டால்`` என்பதனை முதலிற்கொண்டு உரைக்க. தான், ஏ அசைகள். ``வளர் பிறையில்`` என்றதனால், யோகி வளர்பிறையிற்றான் புற உடலை விட்டு நீங்குவான்` என்பது அமைந்து கிடந்தது. உளர் ஒளி - அசைகின்ற ஒளிக்கதிர். பிதிரராவார் மக்களுள் சிறந்தோரைத் தம்பால் வைத்துப் புரக்கும் கடவுளர். இவரே ``தென்புலத்தார்`` (திருக்குறள் - 43.) ஆவர்.
இதனால், யோக நிலைமுற்றப் பெறாத யோகிகளது வாழ்வின் நிறைவிற்குப் பின் உளதாம் நிலை கூறப்பட்டது.